"சிங்குர், நந்திகிராம் விவகாரங்களின்போது நாங்கள் உங்களுக்குக் கொடுத்த ஆதரவை
மறவாமல், இப்போது லால்கர் போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்" -
மாவோயிஸ்டுகள் மம்தா பானர்ஜியிடம் வெளிப்படையாக வைத்துள்ள கோரிக்கை இது!
மேற்கு வங்க லால்கர் வன்முறை விவகாரம் அபாயகரமான அரசியல் ஆதாயப் பிடியில்
சிக்கியுள்ளது என்பதற்கு, இதைக் காட்டிலும் வேறு சாட்சியே தேவையில்லை!
மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், மேற்கு வங்க, கம்யூனிஸ்ட் அரசுக்கு
இடர்ப்பாடும் தர்மசங்கடமும் ஏற்படுத்துவதற்காகவே திட்டம்போட்டு இயங்கி வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமாக இருந்த மாவோயிஸ்ட் பிரிவு, இன்று மேற்கு வங்க
கம்யூனிஸ்ட் அரசையே எதிர்த்து, வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுகிறபோது, மம்தாவே பல
விதங்களில் அதைத் தூண்டிவிடத் தயாராயிருக்கிறார்!
மத்திய அரசோ, மேற்கு வங்க அரசு உதவி கேட்கிறபோது, "துணை ராணுவத்தை
அனுப்புவதற்கில்லை!" என்று முதலில் மறுக்கிறது; பின்னர் தாமதமாக அனுப்புகிறது.
இதற்குள் பிரச்னை தீவிரமடைந்து அபாயகரமான எல்லையை எட்ட, மாவோயிஸ்ட் இயக்கத்தை
மத்திய அரசு தடை செய்கிறது!
தடையை மேற்கு வங்க அரசு வரவேற்றாலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை எதிர்க்கிறது!
"பழங்குடியினருக்காகப் பாடுபடும் மாவோ இயக்கத்தைத் தடை செய்யலாகாது; அரசியல்
ரீதியான, நிர்வாக ரீதியான அணுகுமுறை தேவை" என்கிறார் பிரகாஷ் காரத்.
காங்கிரஸ், திரிணமுல், கம்யூனிஸ்ட் என்று அனைத்துக் கட்சிகளுமே அரசியல் நோக்கில்
இப்பிரச்னையை அணுகினால், அது எவ்வாறு தீரும்?
ஆயுதங்களை ஏந்தி, கொலைக்கு அஞ்சாமல் வளைய வரும் ஒரு பிரிவினரிடம் எப்படி
சுமுகமாக அரசியல் பேச்சுவார்த்தை நடத்துவது! மேற்கு வங்கத்தில் சில பகுதிகளைக்
கைப்பற்றி, அராஜகம் நிகழ்த்திவரும் மாவோ இயக்கத்துக்கு அனுதாபம் காட்டுவது
அபாயத்தில்தான் முடியும்.
லால்கர் மற்றும் அதையொட்டிய மேற்கு வங்க பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின்
வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்காகவே தாங்கள் போராடுவதாக மாவோயிஸ்டுகள் வாதம்
புரிகிறார்கள். ஆனால், மாவோயிஸ்டுகள் ஆயுதம் ஏந்தி பலரைச் சுட்டு வீழ்த்துவதன்
மூலம் பழங்குடியினர் வாழ்க்கை மேம்பட்டுவிடாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராயினும் சரி, பழங்குடி மக்களாயினும் சரி,
அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறையும் கலாசாரமும் இருக்கவே செய்கின்றன.
இம்மக்களிடையே நிகழ்த்தப்படும் சீர்திருத்தத் திட்டங்களும் மேம்பாட்டுத்
திட்டங்களும் அந்தக் கலாசாரத்தைச் சிதைக்காத வகையிலும் அம்மக்கள் இலகுவாக ஏற்று,
பயனுறும் வகையிலும்தான் வகுக்கப்படவேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள்
கடைப்பிடித்து வரும் ஒரு வாழ்க்கை முறையை இரவோடு இரவாக மாற்றிவிட முடியாது.
மத்திய அரசு வன்முறைக்கு இடம் தராமல் ஒடுக்கும்போதே, பழங்குடி மக்களின்
பிரதிநிதிகளை மட்டுமின்றி, அவர்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் அனைத்து
அரசியல் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தி, கல்வி உள்ளிட்ட நல்ல முன்னேற்றத்
திட்டங்களை அம்மக்களுக்காக வகுத்து, அமுல்படுத்துவது நல்லது. இதில் தாமதம் செய்வது,
வன்முறை வளரவே உதவும்.