Kalki 14.03.2010
Designed & Hosted by
 

அமரர் கல்கி எழுதிய `காற்றினிலே வரும் கீதம்' பாடலும் ராஜாஜியின் `குறையொன்றுமில்லை'யும் இன்று ஏறத்தாழ அனைத்துப் பாடகர்களும் கையாளும் பாடல் களாகிவிட்டன. எனினும் எம்.எஸ்.சுப்பு லட்சுமி அவற்றைப் பாடியிருப்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு, பிறரது வடிவங் களை ஏற்பது ரொம்பவும் கஷ்டமே! ஆனால், இந்த இரு பாடல்களையுமே இஞ்சிக்குடி சுப்பிரமணியன் தமது நாதஸ்வர வாசிப்பில் கையாண்ட விதம் அலாதியான அழகாக இருந்தது. துளைக் கருவி வாசிப்பு என்கிற போதிலும் வார்த்தைகளைக் கவனமாகப் பிரித்து, பொருளின் பாவம் முழுமையாக வெளிப் படும்படி வாசித்தார் இந்த இளம் கலைஞர். அமரர் கல்கியின் 110வது பிறந்த நாளன்று, கல்கி விருதும் பரிசும் பெற்ற பிறகு கச்சேரி செய்து கொண்டிருந்தார் அவர். கூடுத லாக அன்று எம்.எஸ்.எஸ்ஸின் ஜன்ம நக்ஷத்திரம் வேறு! இஞ்சிக்குடி சுப்பிரமணியனின் இசை நிகழ்ச்சி அமரர் கல்கி, எம்.எஸ். ஆகிய இருவருக்குமே அர்ப்பணிக்கப்பட்டது போல் அம்சமாக அமைந்தது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி தமிழிசைப் போராளியாக விளங்கியதை நினைவூட்டும் விதமாக, ஸாரங்கா ராகத்தில் விநாயகர் துதி முதல் வாழிய செந்தமிழ் வரையில் தமிழ்ப்பாடல்களாலேயே கச்சேரியை அமைத்திருந்தார் கலைஞர். கன்னட ராகத்தின் எளிமையும் இனிமையும் ஆலாபனையில் கனிந்தொழுக, தண்டபாணி தேசிகர் பாடல்; `நம்பிக்கெட்டவர் எவரய்யா?' என்ற ஹிந்தோள ராக கீர்த்தனையில், குரலிசையின் மிடுக்கு ஒடுக்குகளை உள்ளடக்கிய கச்சிதமான சங்கதிகள்; பிரதான ராகமான தோடியில், அபூர்வ மனோதர்மமும், அசாத்திய கச்சிதமும், அசத்தலான கார்வைகளும் கோத்து நின்ற அழகு, துக்கடாக் களில் எட்டிப்பார்த்த ஷெனாயின் ஸ்பெஷல் எஃபக்ட் என்று ஒன்றரை மணி நேரத்தில் ஒன்றையும் விட்டு வைக்காமல் பொழிந்து தள்ளிவிட்டார் இஞ்சிக்குடி. வஞ்சனையின்றி அவர் தம் வித்வத்தை வெளிப்படுத்தியபோதிலும் `காட்சிப் படுத்துதல்' துளியும் இல்லாத கௌரவத் துடன் மிளிர்ந்தது கச்சேரி. உடன் வாசித்த திருமீயச்சூர் ராமநாதன், தவிலில் துணை நின்ற நாங்கூர் செல்வகணபதி, பெரம் பலூர் மணிகண்டன் ஆகிய மூவரும் இஞ்சிக்குடி இஞ்சினை இம்சிக்காமல் பின் தொடர்ந்த இணைப்புப் பெட்டிகள்! தனியாவர்த்தனத்தில் தவில் கலைஞர்கள் கணக்குப் புள்ளி வைத்து, நாதக் கோலமி ட்டார்கள்!

சென்னை, பாரதிய வித்யா பவன் அரங்கில், கல்கி கிருஷ்ண மூர்த்தி நினைவு அறக்கட்டளை நடத்திய விழாவில் இறுதிவரை இசைக் கச்சேரியைக் கேட்டு ரசித்து மகிழ்ந்தார் நிகழ்ச்சித் தலைவர் என்.கோபாலஸ்வாமி. ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு நாதஸ்வரக் கலையில் ஆழ்ந்த ஈடுபாடு என்பது அவர் உரையாற்றிய போதே தெரிந்தது. சிறு வயது முதலே கோயில் விழாக்களில் நாதஸ்வர இசையைக் கேட்டு ரசித்த தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நாதஸ்வர இசையே கர்நாடக சங்கீதத்தின் வளர்ச்சிக்கும் பரவு தலுக்கும் பெரிதும் உதவியிருக் கிறது என்று எடுத்துக்காட்டி னார். இவரது சொந்த ஊர், தவில் மேதை மீனாக்ஷி சுந்த ரம் பிள்ளையின் ஊரான நீடா மங்கலம் என்பது மேடையில் அறிவிக்கப்பட்டபோது, அவரது ரசனையின் ரகசியம் அம்பலமாயிற்று!

மற்றொரு ரகசியத்தை அம்பலப்படுத்தினார் வரவேற்புரை ஆற்றிய கல்கி ராஜேந்திரன்: "ஆண்டு தோறும் அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக ஐயாயிரம் ரூபாய் என். கோபாலஸ்வாமியிடமிருந்து வருகிறது" என்றார். அவரைப் போலவே அறக்கட்டளையின் மூலதன நிதிக்கு ஆண்டு தோறும் வாரி வழங்கிவரும் எல்லா `கல்கி' அன்பர்களுக் கும் நன்றி தெரிவித்தார். நாதஸ்வர ரசிகரான கோபால ஸ்வாமி, தாம் அமரர் கல்கி யின் ரசிகரும்கூட என்பதைத் தமது சொற்பொழிவில் வெளிப்படுத்தினார். "கல்கி கிருஷ்ணமூர்த்தி ஓர் எழுத் தாளர் மட்டுமல்ல; அவர் ஒரு பத்திரிகையாளர், சமூகப் போராளி, திரைப்பட கதை வசனகர்த்தா, விமர்சகர்... இத்தனை பொறுப்புகளிலும் உயர் ரசனையும் உயர்நோக் கும் பேணி வளர்த்தவர்" என கல்கி கிருஷ்ணமூர்த்தியை நினைவுகூர்ந்தார். `இசைக் கச்சேரிகள் பரவலாக நடப்பது பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும், அவர்கள் தங்கள் கூட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டு ஆண்களுக்குச் சமமாக அமர்ந்து சங்கீதம் கேட்பது போற்றுதலுக்குரியது' என்று அமரர் கல்கி பல்லாண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதியதை நினைவு கூர்ந்தார் கோபாலஸ்வாமி.

வசனக் கவிதை நடையில் வாசித்தளிக்கப்பட்ட விருதுப் பத்திரத் தையும் பரிசையும் பெற்ற இஞ்சிக்குடி சுப்பிரமணியன், தமது பாதையையும் பயிற்சியையும் எளிதாக்கி வைத்த, தமக்கு முந்தைய கலைஞர்களின் சிறப்புக்குத் தலைவணங்கிப் பேசினார் ஏற்புரையில். சுப்பிரமணியனின் வாசிப்பைக் கேட்க பல முன்னணி இசைக் கலைஞர்கள் வந்திருந்தனர். விருது பெற்றவருக்கு மட்டுமின்றி விருதுத் தேர்வாளர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் அது!

தொகுப்பு : ஷ்ரீநி
படங்கள் : ஷ்ரீஹரி

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர்  வாங்குங்கள்.

 
No comments posted.

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2003-2009, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 (30 lines)
Fax: 91-44-4343 8899
To advertise, contact marketing@kalkiweekly.com